by Staff Writer 05-08-2019 | 4:46 PM
வௌ்ளவத்தை பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 9 பேர் காயமமைடந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஊழிய்ர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இரண்டு குழுக்களிலும் மூவர் காயமடைந்துள்ளதுடன் பொலிஸார் மூவரும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையிலும் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு தரப்பினரும் மது போதையில் இருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த மோதலினால் 7 முச்சக்கர வண்டிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் , காரொன்றும், மோட்டார் சைக்கிளொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
சுமார் 150 பேர் மோதலில் ஈடுபட்டிருந்ததுடன், அவர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது, வௌ்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வௌ்ளவத்தை பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.