களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் பலி

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - 52 பேருக்கு காயம்

by Chandrasekaram Chandravadani 04-08-2019 | 8:41 AM
களுத்துறை வஸ்கடுவ பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 43 ஆண்களும் 8 பெண்களும் குழந்தையொன்று உள்ளிட்ட 52 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 3 பெண்களும், மூன்று ஆண்களுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார். எல்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர்திசையில் வந்த தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இன்று அதிகாலை 5.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.