தங்கம் கடத்திய 6 இந்திய பிரஜைகள் கைது

மலவாயில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய 6 இந்திய பிரஜைகள் கைது

by Staff Writer 03-08-2019 | 4:02 PM
Colombo (News 1st) 17 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் 6 இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக விமானம் மூலம் தங்கத்தைக் கடத்த முயன்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களிடமிருந்து 2.440 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலவாயில் மிக சூட்சுமமாக மறைத்து வைத்து தங்கத்தை கடத்துவதற்கு சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளதாக பொலிஸார் கூறினர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (02) அதிகாலை 5.20 அளவில் சுமார் ஒரு கிலோ 60 கிராம் தங்கத்துடன் 4 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர், நேற்று பிற்பகல் 1 கிலோ 370 கிராம் தங்கத்துடன் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்து, தங்கம் கடத்துவதற்கு சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் 6 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.