ஜனாதிபதி வேட்பாளர் யார்: பசில் ராஜபக்ஸவின் பதில்

by Bella Dalima 02-08-2019 | 8:57 PM
Colombo (News 1st) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று கூடியது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமைப்பு முயற்சி பொதுஜன பெரமுனவிற்கு சவாலாக அமையுமா என்ற கேள்விக்கு, 2015 ஆம் ஆண்டு காணப்பட்ட கூட்டமைப்பை விடவும் குறைவான எண்ணிக்கையுடைய கூட்டமைப்பாகவே அது காணப்படும். கட்சியொன்று இல்லாமல் அதன் உறுப்பினர்களை கூட்டமைப்பிற்குள் இணைத்துள்ளனர், என பசில் ராஜபக்ஸ பதிலளித்தார். அமெரிக்க பிரஜாவுரிமை அவர் இரத்து செய்ததாகக் கூறப்படுவது குறித்தும் ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்கு பதிலளித்த பசில் ராஜபக்‌ஸ, இரத்து செய்தவர்களை இரத்து செய்யவில்லை என்றும் இரத்து செய்யாதவர்களை இரத்து செய்துவிட்டதாகவும் கூறுவதாக தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் பிரேரிக்கப்பட்டால், அவரை விடவும் தானே அதிகம் சந்தோசப்படுவதாக பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டார். அத்துடன், SOFA - ACSA போன்ற உடன்படிக்கைகளை கைச்சாத்திடக்கூடாது என்பதே தனது நிலைப்பாடு எனவும் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.