மீனவர்களை கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 01-08-2019 | 3:52 PM
Colombo (News 1st) வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அதிகரித்த காற்றின் வேகம் என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பிராந்தியங்களில் நாளை (02) முதல் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்களிலும் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் காற்று மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.