தோட்டத்தொழிலாளர்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது

தோட்டத்தொழிலாளர்களை தொடர்ந்தும் அரசாங்கம் ஏமாற்றக்கூடாது: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 01-08-2019 | 4:51 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களை நான்கரை வருடங்களாக அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தோட்டத் தலைவர்களே கூறுவது துரதிர்ஷ்டவசமானது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதாகக் கூறி தொடர்ந்தும் தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கக்கூடாது என மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தினார். மேலும், பெருந்தோட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் அரசாங்கத்திலுள்ள போதும், அவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் எவ்வித ஆர்வமும் காட்டாமை குறித்து தாம் வேதனையடைவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இதன்போது, மஹிந்த ராஜபக்ஸவிற்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 700 ரூபாவாகவும், மேலதிகமாக நாளாந்தம் 50 ரூபா நிலையான கொடுப்பனவாகவும் , நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய தேயிலை கொழுந்திற்கு மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோகிராம் கொழுந்திற்கு 40 ரூபா வீதமும் பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளதை சபைக்கு அறிவிப்பதாகக் கூறினார்.