இரட்டைக்கொலை: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி இரட்டைக்கொலை: சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில்

by Staff Writer 01-08-2019 | 5:56 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - ஜயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் சரவணராஜா முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸார் கூறினர். ஜயந்திநகர் பகுதியில் இரட்டைக்கொலை இடம்பெற்ற வீட்டிற்கு அயலில் வசித்த 44 வயதான ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், இந்த கொலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜயந்திநகர் பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும் மகனும் கடந்த 29 ஆம் திகதி இரவு கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டனர். 74 வயதான விஷ்ணுகாந்தி வள்ளியம்மை, 34 வயதான விஷ்ணுகாந்தி லிங்கேஸ்வரன் ஆகியோரே கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.