கூட்டமைப்பு யாப்பு:ரணிலுக்கு அஜித்பீ.பெரேரா கடிதம்

உத்தேச கூட்டமைப்பு யாப்பு: திருத்தங்கள் அடங்கிய கடிதத்தை ரணிலுக்கு அனுப்பி வைத்தார் அஜித் பீ. பெரேரா

by Staff Writer 01-08-2019 | 9:56 PM
Colombo (News 1st)  இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட உத்தேச கூட்டமைப்பு யாப்பு தொடர்பான திருத்தங்கள் அடங்கிய கடிதத்தை, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ. பெரேரா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தில் 8 விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் முதலாவது திருத்தமாக ஜனநாயக தேசிய முன்னணியின் செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும். புதிய கூட்டமைப்பு சிறிகொத்த முகவரியில் பதிவு செய்யப்படவேண்டும் எனவும் கூட்டமைப்பில் காணப்படும் சிறு கட்சிகளின் உறுப்பினர்களிடத்தில் காணப்படக்கூடிய தனிப்பட்ட இடங்களில் கட்சியின் முகவரி அமைந்திருக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. உத்தேச தலைமைத்துவ சபையில் 10 உறுப்பினர்கள் காணப்பட்டால், அதில் 6 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் எனவும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைமைத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியது யார் என்பது குறித்து செயற்குழுவே தீர்மானிக்க ​ ​வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தேச யாப்பு திருத்தத்தை செயற்குழுவிற்கு சமர்ப்பித்து அனுமதி பெறும் வரை கூட்டமைப்பை உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடக்கூடாது எனவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ. பெரேரா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.