மத்தளையில் நெல் களஞ்சியப்படுத்தல் குறித்த அறிக்கை

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தலால் ஏற்படும் இழப்பீடு குறித்த மதிப்பீட்டு அறிக்கையை பெற நடவடிக்கை

by Staff Writer 31-07-2019 | 10:47 AM
Colombo (News 1st) மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தலால் ஏற்படும் இழப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்கு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் குழுவொன்றையும் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் குழுவொன்றையும் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, மத்தளை விமான நிலைய ஓடுபாதையில் பொருத்தப்பட்டுள்ள மின் கம்பங்கள், விமான நிலைய வளாகத்திலுள்ள உபகரணங்கள், குளிரூட்டிகள், கட்டடம் மற்றும் ஏனைய உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் ஆகியன மதிப்பிடப்படவுள்ளது. அரச சட்டத்தரணி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இவ்வாறு மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக முறைகேடுகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் இதற்கான மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஆணைக் குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.