by Staff Writer 30-07-2019 | 8:24 AM
Colombo (News 1st) பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரு குழுக்களுக்கு இடையில் சுமார் 5 மணித்தியாலங்கள் மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 16 கைதிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோர் சிறைக்கூடங்களில் வைக்கப்பட்ட தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
சிறைச்சாலைகளின் கட்டடங்கள், தீ வேகமாக பரவுவதற்கு ஏற்ற வகையில் காணப்படுவதால் தீ வேகமாக பரவியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கைதிகளால் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மோதல்களுக்கு காரணமான குழுக்களின் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களை பெடரல் சிறைச்சாலைக்கு மாற்றுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகில் அதிக கைதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேஸில் மூன்றாமிடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.