நைஜீரியாவில் போகோ ஹராம் தாக்குதல்; 65 பேர் பலி

நைஜீரியாவில் போகோ ஹராம் தாக்குதல்; 65 பேர் உயிரிழப்பு

by Staff Writer 29-07-2019 | 3:44 PM
Colombo (News 1st) ​நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான போர்னோவில் (Borno), மரணச் சடங்கொன்றில் கலந்துகொண்டிருந்தவர்கள் மீது போகோ ஹராம் ஆயுததாரிகள் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த மாநிலத்தின் தலைநகர் மைடுகுரிக்கு அருகிலுள்ள இந்தக் கிராமத்திற்கு வேன் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகளே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர். மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், ஆயுததாரிகளின் தாக்குதலில் நேரடியாக உயிரிழந்ததுடன், ஏனையவர்கள் ஆயுததாரிகளை இடைமறித்து துரத்த முற்பட்டவேளையில் உயிரிழந்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு குறித்த கிராமத்தவர்களால் 11 போகோஹராம் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள், கொலை செய்யப்பட்டமைக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுததாரிகளின் தாக்குதலில் வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் சேகரிப்பதைக் காணக்கூடியதாகவிருந்ததாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பிரெஞ்ச் ஊடகமொன்றின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு தமது பலத்த கண்டனங்களை வௌியிட்டுள்ள நைஜீரிய ஜனாதிபதி மொஹம்மது புஹாரி, தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கைது செய்யுமாறு அந்நாட்டு விமானப்படையினர் மற்றும் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.