அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட்டால் தான் நாட்டில் சட்டவாட்சி உறுதிப்படுத்தப்படும்: சட்ட மா அதிபர்

by Staff Writer 28-07-2019 | 7:18 PM
Colombo (News 1st) இலங்கையின் அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட்டால் தான் நாட்டில் சட்டவாட்சி உறுதிப்படுத்தப்படும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்தார். அது இலகுவான விடயமல்ல என்றாலும், தான் பதவியில் இருக்கும் வரை அந்த செயற்பாட்டை விரைவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தவறிழைக்காதிருப்பதற்கு மனிதர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போது காணப்படும் செயற்பாடுகள் அவ்வாறு பயத்தை ஏற்படுத்துவதாக இல்லை. இந்த செயற்பாடு நீண்ட காலமாக செயலிழந்துள்ளது. தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். இதனை முன்னெடுக்க முடியும். சட்டவாட்சி இல்லை என்றால் ஜனநாயகம் இருக்காது. தமது பணியை உரிய வகையில் மேற்கொள்ளும் நிறுவனங்கள் மாத்திரமே, சட்டவாட்சியை உறுதிப்படுத்தி, சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. எனது நிறுவனத்தை தூய்மையாக்குவதே என்னுடைய முதற் கடமையாகும்.
என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா மேலும் தெரிவித்தார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.