வௌிநாட்டுக் குப்பைகளை கொண்டுவந்தவர்கள் மீது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என ஆய்வு

by Staff Writer 26-07-2019 | 3:59 PM
Colombo (News 1st) இலங்கைக்கு வௌிநாட்டுக் குப்பைகள் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் ஆற்றிய விசேட உரையின் போதே நிதி அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். குப்பைகளின் பெறுமதியை விட மூன்று மடங்கு அதிகமாக அபராதம் அறவிடுவதற்கு சட்டம் காணப்பட்டாலும், இந்த குற்றத்திற்கு அமைய அந்த அபராதத் தொகை போதுமானது அல்ல என நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 9,64,000 கிலோகிராம் குப்பைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாடு Basel உடன்படிக்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகக் காணப்படுவதாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 111 கழிவுக்கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் முறையான சுங்க விசாரணை மேற்கொண்டு, அடையாளம் காணப்படும் குற்றவாளிகளுக்கு சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் எனவும் நிதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். Hayleys நிறுவனத்திடம் காணப்படும் குப்பைகளை அவர்களே வைத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்​.