லிபியாவில் படகு விபத்தில் 150 பேர் பலி

லிபியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 150 பேர் பலி

by Bella Dalima 26-07-2019 | 5:01 PM
லிபியாவில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 150 பேர் பலியாகியுள்ளனர். வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவின் அல் கோம்ஸ் நகரில் இருந்து இரண்டு படகுகளில் 300-க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் ஐரோப்பா நோக்கி பயணித்துள்ளனர். இவர்களுடைய படகுகள் தலைநகர் திரிப்போலியிலிருந்து கிழக்கில் 120 கிலோமீட்டர் தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவலறிந்த லிபிய நாட்டு கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கடலில் சிக்கிய 150 பேரை மீனவர்கள் உதவியுடன் மீட்டுள்ளனர். எனினும், இந்த விபத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர்களது உடல்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.