மாணிக்கக்கல் அகழ்ந்தவர் துப்பாக்கிச்சூட்டில் காயம்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டோருக்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம்

by Staff Writer 26-07-2019 | 3:28 PM
Colombo (News 1st)  யால சரணாலயத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சிலருக்கும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. யால சரணாலயத்தின் மூன்றாம் இலக்க வலயத்தில் சந்தேகநபர்களால் மாணிக்கக்கல் அகழப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன்போது, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணிக்கக்கல் கடத்தல்காரர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மூன்று பேர் தப்பிச்சென்றுள்ளனர். கதிர்காமம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணிக்கக்கல் அகழ்வு செய்யப்பட்ட இடத்திலிருந்து கையடக்க தொலைபேசிகள் மூன்றும் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.