ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினிக்கு பிணை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு ஒரு மாத கால பிணை

by Staff Writer 25-07-2019 | 1:19 PM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி ஸ்ரீஹரன் ஒரு மாத பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வேலூர் மகளிர் சிறைச்சாலையிலிருந்து இன்று (25) காலை நளினி வௌியேறியுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த 28 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதங்களுக்குப் பிணை கோரியிருந்தார். இந்த வழக்கில் தாமே வாதாடிய நளினி, தனது மகளுக்காக தற்போது வரை எந்தவொரு சம்பிரதாய சடங்குகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் எனவே திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாதங்களுக்கு பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரியிருந்தார். எனினும், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் பிணை வழங்கி கடந்த 5ஆம் திகதி உத்தரவிட்டது. பிணை உத்தரவு கிடைத்ததை அடுத்து, வேலூர் மகளிர் சிறையிலிருந்து இன்று காலை 9 மணியளவில் நளினி வௌியேறியுள்ளார். இதனையடுத்து, திராவிட இயக்க தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் நளினி தங்கவுள்ளார். நளினியின் மகள் ஹரித்ரா தற்போது லண்டனில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.