ஶ்ரீ.சு. கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என சுதந்திரக் கட்சி யோசனை முன்வைப்பு

by Staff Writer 25-07-2019 | 8:50 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (24) மாலை கூடியுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில், மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்ற யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியாகப் பயணிக்க வேண்டுமாயின் இதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கு முன்பாக, பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்து, தலைவர்களைத் தெரிவுசெய்யுமாறு ஜனாதிபதியிடம் இதன்போது கோரிக்கை விடுத்ததாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கூட்டணியை உருவாக்குவதில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுன சார்பாக கோட்டாபய ராஜபக்ஸவை வேட்பாளராகக் களமிறக்கும் பட்சத்தில் சிக்கல்கள் தோன்றுமா என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியமைக்கு, இரு தரப்பினரும் இணைந்து வேட்பாளர் ஒருவரைத் தெரிவுசெய்வதால், எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என தயாசிறி ஜயசேகர பதிலளித்துள்ளார்.