பிரித்தானியாவின் புதிய பிரதமரானார் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு

by Staff Writer 25-07-2019 | 7:39 AM
Colombo (News 1st) பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்றுள்ளார். இந்தநிலையில், பிரெக்ஸிட் நடவடிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதி நிறைவேற்றப்படும் என, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னரான தமது முதலாவது உரையில் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் பிரதமரைத் தெரிவுசெய்வதற்கான இறுதிக்கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்த நிலையில், பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று (24) மாலை அவர் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். பதவியேற்பைத் தொடர்ந்து, அவர் தமது கன்னி உரையை நிகழ்த்தியிருந்தார். பிரெக்ஸிட் நடவடிக்கை எதிர்வரும் ஒப்டோபர் 31ஆம் திகதி நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். இதனிடையே, முன்னாள் பிரதமர் தெரேசா மே தமது பிரியாவிடை உரையை நிகழ்த்தியுள்ளார். பிரதமராகக் கடமையாற்றக் கிடைத்தமை பெரும் பாக்கியம் எனவும் தன்னுடன் கடமையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார். இதேவேளை, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜோன்சன், பிரெக்ஸிட் நடவடிக்கைக்கான குழு உறுப்பினர்களைத் தெரிவுசெய்துள்ளார். இந்நிலையில், இன்று (25) மாலை பிரெக்ஸிட் நடவடிக்கைக்கான குழுவைத் தெரிவுசெய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை போரிஸ் ஜோன்சன் அதிகரிப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனிடையே, பாரதப் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள போரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.