கண்டி-கொழும்பு வீதியில் வாகனப்போக்குவரத்திற்கு தடை

கண்டி - கொழும்பு வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

by Staff Writer 25-07-2019 | 5:02 PM
Colombo (News 1st) கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவலதெனிய கஜமா விகாரையில் இடம்பெறவுள்ள வருடாந்த பெரஹெரவை முன்னிட்டு கண்டி - கொழும்பு வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ரங்வெல சந்தியிலிருந்து மீபிட்டி சந்தி வரையிலான வீதிப் போக்குவரத்து எதிர்வரும் 27 ஆம் திகதி இரவு வரை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதனால் கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் ரங்வெலயில் மாற்றுப் பாதையின் ஊடாக மீபிட்டி வரையில் பயணித்து பிரதான வீதியில் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து கொழும்பு வரையில் பயணிக்கும் வாகனங்கள் மீபிட்டி மாற்று வீதி ஊடாக சென்று பிரதான வீதிக்கு செல்ல முடியும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதேவேளை, பௌத்தாலோக்க மாவத்தை, ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தை சந்தியிலிருந்து தும்முல்ல சுற்றுவட்டம் வரையான கொழும்பிலிருந்து வௌியேறும் ஒழுங்கையூடான வீதிப்போக்குவரத்து நாளை (26) முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது. இதற்கு மாற்றுப்பாதையாக தும்முல்ல சுற்றுவட்டமூடாக பௌத்தாலோக்க மாவத்தைக்கு செல்லும் வாகனங்கள் தேர்ஸ்டன் வீதியூடாக நந்தா மோட்டார்ஸ் வழியே சுதந்திர சுற்றுவட்டத்தினூடாக பிலிப் குணவர்தன மாவத்தை, ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தையூடாக பௌத்தாலோக்க மாவத்தைக்கு பிரவேசிக்க முடியுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு நகரசபையினால் முன்னெடுக்கப்படும் அகழ்வுப்பணிகள் காரணமாக நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரை குறித்த பகுதிகளில் வாகனப்போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.