ஐ.நா பிரதிநிதி ஒருவர் நாட்டின் நீதிபதிகளை சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி சபாநாயகரால் தடுக்கப்பட்டது

by Staff Writer 24-07-2019 | 8:40 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கையின் நீதிபதிகளை சந்திப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி Clément Voule, பிரதம நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோரை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டமை தொடர்பில் தாம் ஆராய்ந்ததாக சபாநாயகர் குறிப்பிட்டார். ஐ.நா விசேட பிரதிநிதியின் வேண்டுகோள் தொடர்பில் இத்தகைய சந்தர்ப்பத்தை வழங்காதிருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அதற்கமைய நீதி அமைச்சர் மற்றும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறியதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். இதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளுடனான சந்திப்பு இடம்பெறாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார். அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி Clément Voule தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார். மக்களின் சட்ட உரிமையை நடைமுறைப்படுத்தும் மதிப்பிற்குரிய நீதிமன்றம் எமது நாட்டிலுள்ள முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். சுயாதீன நீதிமன்றத்தின் நீதிபதிகளை அழைத்து கூட்டங்களை நடத்துவதற்கு ஐ.நா பிரதிநிதிக்குள்ள அதிகாரமும் தேவையும் என்ன? இத்தகைய நபர்களின் செயற்பாடுகள் மூலம் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை சீர்குலைகின்றது அல்லவா? Blue Mountain மோசடி போன்ற பாரிய ஊழல்மிகு கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ACSA, SOFA ஆகிய நாட்டிற்கு பாதகமான உடன்படிக்கைகள் குறித்தும் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்து தகவல்களை வௌியிட்டு வருகின்றது. இவை தொடர்பிலான மேலும் பல தகவல்கள் எம்மிடமுள்ளதுடன் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு அறியப்படுத்த நாம் பின்வாங்கப்போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கான உடன்படிக்கைகளில் எமது நாடு கையொப்பமிடவில்லை. எனினும், ஐ.நா பிரதிநிதிகள் அவ்வப்போது நாட்டிற்கு வருகை தந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். எவ்வாறாயினும், ACSA, SOFA போன்ற உடன்படிக்கைகள் ஊடாக இதற்கு முற்றிலும் மாறுபட்ட விடயமே நிகழப்போகின்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எதனைக் கூறினாலும், இந்த உடன்படிக்கைகள் மூலம் அதிகாரம் யாருக்கு கிடைக்கப்போகின்றது என்பது தௌிவானதே. இந்த உடன்படிக்கைகள் மூலம் அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் எமது நாட்டுப் பிரஜைகளை அழைத்து விசாரணை செய்வதற்கான அதிகாரமும் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய செயற்பாடுகளுக்கு முயற்சிப்போருக்கு இந்தியா, பாகிஸ்தான் போன்ற எமது அயல்நாடுகள் சட்ட நடவடிக்கையூடாகவே பதிலளிக்கின்றன.