உயர்தர மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் இன்று முதல்

உயர்தரப் பரீட்சையின் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் இன்று முதல்

by Staff Writer 24-07-2019 | 8:28 AM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் அனுமதி அட்டை இதுவரை கிடைக்கப்பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு, இன்று (24) முதல் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அனுமதி அட்டைகளைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என, பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இணையத்தளத்தில் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவுசெய்து தனியார் பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சைக்கான அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த சில தினங்களாக நிலவிய தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைப்பதில் தாமதம் நிலவியதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தத் தடவை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களுக்கமைய 3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.