இரண்டாவது நாளாகவும் திருகோணமலையில் குரலற்ற மக்களைத் தேடி பயணம்

by Staff Writer 24-07-2019 | 8:16 PM
Colombo (News 1st) திருகோணமலை பல்வேறு சிறப்புக்களால் புகழ்பூத்த மாவட்டமாகத் திகழ்கின்றது. எனினும், இங்கு வாழும் ஒரு சாரார் நாளாந்தம் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் வசித்து வருகின்றனர். குரலற்றவர்களாக இருக்கும் அம்மக்களைத் தேடி இன்று இரண்டாவது நாளாகவும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் விரைந்தனர். மக்கள் சக்தி குழுவினர் திருகோணமலை - குச்சவௌி, திரியாய் கிராமத்திற்கு இன்று சென்ற சந்தர்ப்பத்தில் மக்கள் ஒன்றுகூடியிருப்பதை அவதானித்துள்ளனர். அங்கு சென்று வினவியபோது காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. 75 வயதான நல்லையா வள்ளியம்மை என்ற வயோதிபப் பெண் இன்று அதிகாலை 5.00 மணியளவில் அவரின் வீட்டின் பின்புறம் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த திரியாய் பகுதி மக்கள், 2002 ஆம் ஆண்டு மீளக்குடியேறினர். தாம் மீளக்குடியேறிய நாளில் இருந்து யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதாக இங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரையில் யானை தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். யானை வேலி அமைக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான மின்சாரம் வழங்கப்படவில்லை என மக்கள் சக்தி குழுவினரிடம் கிராம மக்கள் கூறியுள்ளனர். மற்றுமொரு குழுவினர் திருகோணமலை மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதிக்கு சென்று, மக்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். நொச்சிக்குளம் கிராம மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு மீளக்குடியேறியுள்ளனர். சுமார் 86 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்திற்கான வீட்டுத்திட்டம் இதுவரையில் வழங்கப்படவில்லை. மக்கள் வீடுகள் இல்லாமல் தற்காலிக தகரக்கொட்டகைகளிலே வாழ்ந்து வருகின்றனர். மாத்தறை - தியகஹ கிராம மக்கள், அரசாங்கத்தின் திட்டமொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரை அதிகளவில் உறிஞ்சும் அகேஷியா மற்றும் பைனஸ் மரங்கள் அரசாங்கத்தினால் கிராமம் முழுவதும் நடப்பட்டுள்ளன. இதனால் தியகஹ கிராமத்தின் நீர் நிலைகள் வற்றிப்போயுள்ளதுடன், தற்போது மண் சரிந்து வீழும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர், மொரவக்க - மொரக்கந்த கிராமத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில், பகுதியளவில் காணப்படும் பல வீடுகளை அவதானித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் 25 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அதனை இந்த மக்கள் நிராகரித்துள்ளனர். அந்த நிதியில் வீடு, காணியை கொள்வனவு செய்ய முடியாமையே இதற்கு காரணமாகும்.