மானிப்பாய் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

by Staff Writer 23-07-2019 | 11:10 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மானிப்பாய், இணுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியிலுள்ள வீடுகளில் தாக்குதலை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதை அடுத்து பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. இதன்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார்சைக்கிள்களில் சென்ற ஏனைய 5 பேரும் தப்பிச்சென்ற நிலையில் அவர்களில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில், நேற்று மாலை 6 மணியளவில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இளைஞர்களே இணுவில் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்