மருத்துவப்படிப்பை முடித்தோர் தொடர்பில் உத்தரவு

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மருத்துவத் தொழிலில் ஈடுபடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு

by Staff Writer 23-07-2019 | 8:35 PM
Colombo (News 1st) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அல்லது இலங்கை மருத்துவ சபை ஊடாக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு இலங்கையில் மருத்துவ தொழிலில் ஈடுபடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு உத்தரவிட்டுள்ளது. வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டப்படிப்பை பூர்த்தி செய்து, இலங்கை மருத்துவ சபையூடாக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி எய்திய போதிலும், தங்களை இலங்கை மருத்துவ சபை நிராகரித்தமைக்கு எதிராக 16 பேரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, L.T.B.தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோர் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளனர். அதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 30 நாட்களுக்குள் மருத்துவ பட்டதாரிகளை இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பயிச்சி வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.