by Staff Writer 23-07-2019 | 7:19 PM
Colombo (News 1st) கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை கொண்டு வந்தவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கழிவுகளை இறக்குமதி செய்த நிறுவனம் மற்றும் தொடர்புடைய நபர்களுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, 'இலங்கையைப் பாதுகாப்போம்' தேசிய அமைப்பு இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
அத்துடன், முதலீட்டு சபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கம் நேற்று (22) அறிவித்ததற்கு ஏற்ப பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கி 130 கொள்கலன்கள், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் காணப்படுகின்றன.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் CICD முனையத்தில் கழிவுகள் அடங்கிய 111 கொள்கலன்கள் காணப்படுகின்றன.
மெத்தை எனக்கூறி இறக்குமதி செய்யப்பட்டு, சுங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் காணப்படும் கழிவுகளே இவை.
இவ்வாறான கழிவுப்பொருட்களை மீள் ஏற்றுமதி செய்ய முடியுமா என்பதும் பிரச்சினைக்குரிய விடயமாகும்.