ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் ஆஜர்

by Staff Writer 22-07-2019 | 2:25 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று (22) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இவர்கள் இருவருக்கும் எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் பயங்கரவாதக் குழுவினூடாக ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடும் என புலனாய்வுத் தகவல் கிடைத்தும், தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையூடாக, கடமையை மீறியமை குறித்து அவர்கள் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வழக்கின் முதலாவது சந்தேகநபரான ஹேமசிறி பெர்னாண்டோவிடம் கடந்த 15 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிஷிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது சந்தேகநபரான பூஜித் ஜயசுந்தரவிடம் கடந்த 18, 19 ஆம் திகதிகளில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்கான இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிஷிஸ்டர் ஜெனரல் கூறியுள்ளார். பூஜித் ஜயசுந்தரவிடம் இன்று வாக்குமூலம் பெற்றப்பட்டதன் பின்னர் அது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி, முன்னேற்ற அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதி சொலிஷிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று அறிவித்துள்ளார். வழக்கின் பிரதிவாதிகளுக்கு கடந்த 9ஆம் திகதி நீதிமன்றத்தால் வழக்கப்பட்ட பிணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக ஊடக அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பூஜித் ஜயசுந்தரவின் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி டில்ஷான் ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலில் காணப்படுவதால், ஏதேனும் தகவல் குறித்து விண்ணப்பிக்கும் போது, நிறுவனத் தலைவரின் அனுமதியுடன் அதனை வழங்குவதற்கான உரிமை காணப்படுவதாக இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிஷிஸ்டர் ஜெனரல் கூறியுள்ளார். இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.