ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேக்கம்

மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட்சத்திற்கும் அதிக கடிதங்கள் தேக்கம்

by Staff Writer 22-07-2019 | 7:14 PM
Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவற்றில் மூன்றரை இலட்சம் கடிதங்கள் வர்த்தக ரீதியானவை எனவும் இரண்டரை இலட்சம் கடிதங்கள் சாதாரண தபால் எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நாட்டிலுள்ள அனைத்துக் கட்டுப்பாட்டு நிலையங்களிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். எனினும், பெரும்பாலான உப மற்றும் மத்திய தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சேவையில் இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகளை இதுவரை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நேற்று (21) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதற்கு நாடளாவிய ரீதியிலுள்ள தபால் ஊழியர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.