கிளிநொச்சி - கௌதாரிமுனை பகுதியில் மணல் அகழ்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு

by Staff Writer 22-07-2019 | 7:26 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - கௌதாரிமுனை பகுதியில் மணல் அகழ்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி. சரவணராஜா இன்று (22) உத்தரவிட்டுள்ளார். கௌதாரிமுனையில் மணல் அகழ்வதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி பூநகரி பொலிஸாரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கௌதாரிமுனையில் அனுமதிப்பத்தரமின்றி மணல் அகழ்வதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். நீண்டகாலமாக அனுமதியின்றி மணல் அகழப்படுவதாகத் தெரிவித்து, பூநகரி பிரதேச செயலகத்தில் கடந்த 19ஆம் திகதி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.