தமிழ் அரசியல் கைதியின் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

தமிழ் அரசியல் கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் 8ஆவது நாளாகத் தொடர்கிறது

by Staff Writer 22-07-2019 | 3:34 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் 8 நாட்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதியின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் T.M.J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார். தனக்கு பிணை வழங்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் திரைப்படக் கூட்டுதாபனத்தின் முன்னாள் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார். இரண்டு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் புதிய மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தனக்கான வழக்கு விசாரணையின்போது, சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும் அதனால் போதுமான சாட்சியங்களைத் திரட்டமுடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். தனக்கு பிணை வழங்கும் பட்சத்தில் தேவையான சாட்சியங்களை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட, அவற்றில் ஒரு வழக்கிற்கு ஆயுள் தண்டனையும் மற்றைய வழக்கிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் இடத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.