விசேட தெரிவுக் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் 23இல்

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் 23ஆம் திகதி

by Staff Writer 21-07-2019 | 1:51 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் 23 ஆம் திகதி வௌியிடப்படவுள்ளது. இதுவரை பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அறிக்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தெரிவுக்குழுவின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவும் தெரிவுக்குழுவில் வாக்குமூலம் வழங்கவுள்ளார். அவர் வாக்குமூலமளிக்கும் சந்தர்ப்பங்களில், ஊடகங்களுக்கு அனுமதியளிக்காதிருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. இவரைத்தவிர, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் குறித்த பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பதிரன ஆகியோரும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளனர்.