தமிழ் அரசியல் கைதி 6 ஆவது நாளாக உண்ணாவிரதம்

புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் தமிழ் அரசியல் கைதி 6 ஆவது நாளாக உண்ணாவிரதம்

by Staff Writer 20-07-2019 | 3:54 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் கடந்த 6 தினங்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதியின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் D.M.J.W. தென்னக்கோன் தெரிவித்தார். அவர் நீரை மாத்திரம் அருந்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறினார். தனக்கு பிணை வழங்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார். இரண்டு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் புதிய மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தனக்கான வழக்கு விசாரணையின் போது, சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும் அதனால் போதுமான சாட்சியங்களை திரட்டமுடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். தனக்கு பிணை வழங்கும் பட்சத்தில் தேவையான சாட்சியங்களை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கணகசபை தேவதாசன் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் ஒரு வழக்கிற்கு ஆயுள் தண்டனையும் மற்றைய வழக்கிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்