வாழ்க்கையோடு போராடும் மக்களைத் தேடும் பயணத்தின் இரண்டாம் நாள்

by Staff Writer 19-07-2019 | 8:10 PM
Colombo (News 1st) அடிப்படைத் தேவைகளைக் கூட பெற்றுக்கொள்ளப் போராடும் மக்களை நாடி, மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் பயணம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகளின் கண்களுக்கு மறைக்கப்பட்ட மக்கள் பலரையும் சந்தித்தனர். வறட்சியின் கோரத்தாண்டவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனலைத்தீவிற்கு நியூஸ்ஃபெஸ்ட்டின் ஒரு குழுவினர் சென்றிருந்தனர். அங்கு குடிநீர் இன்றி வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கும் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். இதேவேளை, நியூஸ்ஃபெஸ்டின் மற்றுமொரு குழுவினர் நயினாதீவை நோக்கிப் பயணித்தனர். நூற்றுக்கணக்கான மக்களுடன் படகில் பயணித்தவர்கள் முதலில் நயினாதீவின் நான்காம் வட்டாரத்திற்கு சென்றிருந்தனர். நான்காம் வட்டாரத்தில் 35 குடும்பங்கள் வாழ்கின்ற போதிலும் அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பெரும் துயரங்களை எதிர்கொள்வதைக் காணமுடிந்தது. அதன் பின்னர் மக்கள் சக்தி குழுவினர் புங்குடுதீவிற்கு சென்று அங்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.