by Staff Writer 19-07-2019 | 8:27 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் உலக சாதனை படைத்தார்.
இதேவேளை, உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தொடரில் இலங்கை அணி சிங்கப்பூரை தோற்கடித்து 15 ஆம் இடத்தைப் பிடித்தது.
இங்கிலாந்தின் லிவர்பூலில் நடைபெறும் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் 15 மற்றும் 16 ஆம் இடங்களை தீர்மானிக்கும் போட்டி இன்று நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் இலங்கை அணியும் சிங்கப்பூர் அணியும் மோதின. போட்டியில் இலங்கை அணி 78- 57 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற லீக் போட்டியொன்றிலும் இலங்கை அணி சிங்கப்பூரை 88 - 50 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.
இன்றைய போட்டியில் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் 77 கோல்களைப் போட்டார்.
இதன் மூலம் கடந்த திங்கட்கிழமை சிங்கப்பூர் அணிக்கு எதிராக 76 கோல்களைப் போட்டு தானே படைத்த உலக சாதனையை தர்ஜினி சிவலிங்கம் இன்று புதுப்பித்தார்.
இது உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரொன்றில் வீராங்கனையொருவர் பதிவு செய்யும் அதிகூடிய கோல்களாகும்.
தர்ஜினி சிவலிங்கம் இவ்வருட உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இதுவரையில் 271 கோல்களைப் போட்டு, தொடரில் அதிகூடிய கோல்களைப் போட்ட வீராங்கனையாகவும் பதிவாகியுள்ளார்.
எவ்வாறாயினும், இன்றைய போட்டியுடன் அவர் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.