சுகாதார சிற்றூழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

யாழ். மாநகர சபை சுகாதார சிற்றூழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 17-07-2019 | 8:17 PM
Colombo (News 1st) யாழ். மாநகர சபையின் சுகாதார சிற்றூழியர்கள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கடந்த 15 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் சிற்றூழியர் ஒருவரை சுகாதாரப் பிரிவின் மேற்பார்வை அதிகாரி தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநகர சபையின் சுகாதார சிற்றூழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுத்து, மேற்பார்வை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என இவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சுகாதாரப் பிரிவின் மேற்பார்வை அதிகாரி, சிற்றூழியரைத் தாக்கியமை தொடர்பில், தொழிற்சங்கத் தலைவருக்கும் மேற்பார்வை அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிவடைந்துள்ளது. இதில் மேற்பார்வை அதிகாரி சிறு காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பில் யாழ். தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரு தரப்பினராலும் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இரு தரப்புகளையும் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இரு தரப்பினரையும் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இல்லாவிடின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.