மெகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதி உண்ணாவிரதம்

புதிய மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரதம்

by Staff Writer 17-07-2019 | 5:04 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதி ஒருவர் தனக்கு பிணை வழங்குமாறு கோரி புதிய மெகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். திரைப்பட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான கணகசபை தேவதாசன் என்ற அரசியல் கைதியே கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார். இரண்டு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் புதிய மெகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தனக்கான வழக்கு விசாரணையின் போது, சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும், அதனால் போதுமான சாட்சியங்களைத் திரட்ட முடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். தனக்கு பிணை வழங்கும் பட்சத்தில் தேவையான சாட்சியங்களை தன்னால் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட கணகசபை தேவதாசன் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் ஒரு வழக்கிற்கு ஆயுள் தண்டனையும் மற்றைய வழக்கிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்