சீனாவின் Sinopec இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஆரம்பிக்கத் தீர்மானம்

by Staff Writer 16-07-2019 | 8:14 PM
Colombo (News 1st) சீனாவின் பெட்ரோலிய மற்றும் இரசாயனக் கூட்டுத்தாபனமான Sinopec நிறுவனம், இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ரீதியில் இன்று தகவல் வௌியாகியுள்ளது. Fuel Oil இலங்கை நிறுவனம் என குறித்த நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளதுடன், அது ஹம்பாந்தோட்டையில் செயற்படுத்தப்படவுள்ளது. சூயஸ் கால்வாய் மற்றும் மலாக்கா நீரிணை ஆகியவற்றுக்கு இடையிலான பிரதான கப்பல் மார்க்கத்திலுள்ள கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நோக்கில், இலங்கைக்குள் எரிபொருள் நிலையமொன்றை சீனாவின் பெட்ரோலிய மற்றும் இரசாயனக் கூட்டுத்தாபனமான Sinopec நிறுவனம் ஸ்தாபிக்கவுள்ளதாக சீனாவின் பல ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 10 மில்லியன் மெட்ரிக்தொன் கொள்ளளவைக் கொண்ட இந்த நிறுவனம், 2020 ஆம் ஆண்டளவில் மின் உற்பத்தி நிலையங்களுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளை விநியோகிக்க எண்ணியுள்ளதாகவும் சீன ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் முதலீட்டு வலயத்தில், China Merchant Port Holdings, China Harbor Engineering மற்றும் சில சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதனிடையே, நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய முதலீடு என தெரிவித்து, மிரிஜ்ஜவில எரிபொருள் சுத்திகரிப்பு கட்டடத்திற்கு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. 200 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு கட்டடத்தின் நிர்மாணப்பணிகளை, 44 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய எண்ணியுள்ளதாக அன்றைய தினம் கூறப்பட்டது. இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட வகையில், ஓமானின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு தொடர்பான அமைச்சு மற்றும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனமான Silver Park International நிறுவனம் ஆகியன இந்தத் திட்டத்தின் பிரதான முதலீட்டாளர்களாவர்.