ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 16-07-2019 | 7:30 AM
Colombo (News 1st) மத்திய தபால் பரிமாற்றகத்தின் சேவையிலிருந்து விலகி, தபால் ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) மாலை 4 மணி முதல் அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாளை மறுதினம் மாலை 4 மணிவரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து, அரசினால் கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவைக்கு சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. எனினும், அது குறித்து அமைச்சரவை இதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று தமது கோரிக்கைகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.