ஆடிவேல் சக்திவேல் பவனி கதிர்காமத்தை சென்றடைந்தது

by Staff Writer 16-07-2019 | 1:43 PM
Colombo (News 1st) கந்தபுராணத் தொடர்புடைய தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட வேல்பவனி இன்று (16) இனிதே நிறைவடைந்துள்ளது. சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனியில் வலம்வந்த வேல்பெருமான், கதிர்காமத் திருத்தலத்தில் இன்று எழுந்தருளினார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலுக்கு இன்று காலை செல்லக் கதிர்காமத்தில் சிறப்புப் பூஜைகள் நடாத்தப்பட்டன. செல்லக்கதிர்காமத்தில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் எழுந்தருளிய வேல்பெருமானுக்கு அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடாத்தப்பட்டன. ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தேவஸ்தானத்தில் வேல்பெருமான் வெளிவீதி வலம்வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்தார். கதிர்காமத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் தேவஸ்தானத்தில் வேல்பெருமான் எழுந்தருளியுள்ளார். கதிர்காமத் திருத்தலத்தில் முருகப்பெருமானுக்கு பூசை செய்யும் கப்புறாளையால் மூலஸ்தானத்தில் பூஜைகள் நடத்தப்பட்டன. பாரம்பரிய ஆடிவேல் விழாவை, ஆடிவேல் சக்திவேல் விழாவாக மகாராஜா நிறுவனம் இந்தத் தடவை மூன்றாவது வருடமாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.