சாதனை படைத்தார் தர்ஜினி சிவலிங்கம்

அதிக கோல்களைப் பெற்று சாதனை படைத்தார் தர்ஜினி சிவலிங்கம்

by Staff Writer 16-07-2019 | 9:21 PM
Colombo (News 1st) இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் இம்முறை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் அதிக கோல்களைப் பெற்ற வீராங்கனை எனும் சாதனையை தனதாக்கினார். இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் சிங்கப்பூருக்கு எதிரான நேற்றைய (15) போட்டியில் தர்ஜினி சிவலிங்கம் இந்த சாதனையைப் படைத்தார். போட்டியை 88-50 எனும் கோல் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிகொண்டது. இலங்கை அணி பெற்ற 88 கோல்களில் 76 கோல்கள் தர்ஜினி சிவலிங்கத்தின் கரங்களால் பூர்த்தி செய்யப்பட்டன. இதற்கமைய, இம்முறை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் தர்ஜினி சிவலிங்கம் போட்ட கோல்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது. இதன் மூலம் உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரொன்றில் அதிக கோல்களைப் போட்ட வீராங்கனையாக தர்ஜினி சிவலிங்கம் பதிவானார். இதற்கு முன்னர் இந்த சாதனையை தன்னகத்தே வைத்திருந்த சிம்பாப்வேயின் ஜொய்ஸ் டகய்ட்சாய் 125 கோல்களைப் போட்டிருந்தார். இந்நிலையில், உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 65 - 55 எனும் கோல் கணக்கில் சமோவா வென்றது. போட்டியில் முதல் கால் மணியை 17 - 13 எனும் கோல் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. எனினும், அடுத்த மூன்று கால் மணிகளிலும் ஆதிக்கம் செலுத்திய சமோவா அணி 65 - 55 எனும் கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் 58 வாய்ப்புகளில் 52 கோல்களைப் போட்டார்.