கருப்பையா இராஜேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

கருப்பையா இராஜேந்திரனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 15-07-2019 | 7:45 PM
Colombo (News 1st) வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 10ஆவது சந்தேகநபரான அப்துல்லா என அழைக்கப்படும் கருப்பையா இராஜேந்திரன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர் இன்று (15) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல்களுக்காகக் குண்டுகளைத் தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த செப்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்த, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள 9 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்னும் விசாரணைகள் நிறைவுபெறவில்லை என, பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றில் அறிவித்துள்ளனர். இதற்கமைய, 10ஆவது சந்தேகநபரான அப்துல்லாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான், பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.