குப்பைகள் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலம்

குப்பைகள் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது - அம்பலம்

by Fazlullah Mubarak 14-07-2019 | 8:10 PM

சுங்கத்தின் பொறுப்பில் உள்ள குப்பைக் கொள்கலன்கள் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைக்கூலங்கள் என்பன 2013 ஆம் ஆண்டில் வௌியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 102 கொள்கலன்களில் 94 கொள்கலன்களில் குப்பை நிரப்பப்பட்டுள்ளமை அண்மையில் தெரியவந்தது. அவற்றில் 5 கொள்கலன்களை சுங்க அதிகாரிகள் திறந்து பரிசீலித்தபோது இந்த விடயம் அம்பலமாகியது. கொழும்புத் துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இந்த குப்பைகளை ஏற்றி கொள்கலன்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இவ்வாறு குப்பைக்கூழங்கள் குவிக்கப்பட்டுள்ளமை காணமுடிந்தது. குப்பைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு சட்டத்தில் அனுமதியற்ற நிலையில் குறித்த நிறுவனம் 2013 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி அப்போதைய நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஸவின் கையப்பத்துடன் வௌியடப்பட்டுள்ள விசேட வர்தத்மானியொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி இந்தக் கொள்கலன்களை கொண்டுவந்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறைந்தபட்சம் 65 வீதத்திற்கும் மேற்பட்ட வௌிநாட்டு முதலீட்டுடன் சில வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் பொருட்களை சிறு அளவில் மீளத் தயாரித்து ஏற்றுமதி செய்தல். ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்து அல்லது கொண்டு வராமல் வேறு நாடு ஒன்றிற்கு கப்பலில் அனுப்புவது. நாட்டினுள் பிணைக்கப்பட்ட குதங்கள் அல்லது பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைந்த விநியோக சேவைகளை மேற்கொள்ளுதல் என்பவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.