காலி கடலில் ஹெரோயின் கடத்தியவர்கள் குறித்து தகவல்

காலி கடற்பரப்பில் ஹெரோயின் கடத்தல் - அம்பலமாகும் புதிய தகவல்கள்

by Fazlullah Mubarak 14-07-2019 | 8:17 PM

பாகிஸ்தான் மற்றும் ஈரானிய பிரஜைகள் இருவரினாலேயே காலி கடற்பரப்பில் ஹெரோயின் கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடத்தல்காரர்கள் பல சந்தரப்பங்களில் படகுடன் தொடர்புகொண்டு, இலங்கைக்கு ஹெரோயினைக் கொண்டு செல்லுமாறு தகவல் வழங்கியதாக சந்தேகநபரான ஈரானிய பிரஜை தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக விசாரணைகளுக்காக நாளை ஈரானிய தூதுவராலயத்தின் மொழிபெயர்ப்பு உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈரானியர்கள் 9 பேரும் நேற்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் சந்தேகநபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கினார். கடந்த 10ஆம் திகதி காலியிலிருந்து 100 கடல்மைல் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் வைத்து படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் அதிலிருந்து 70 கிலோகிராம் நிறையுடைய 800 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த படகுடன் ஈரானியர்கள் 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.