ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா: போனி கபூர் மறுப்பு

ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா: போனி கபூர் மறுப்பு

by Bella Dalima 13-07-2019 | 6:04 PM
கடந்த வருடம் குடும்பத்தாருடன் துபாய் சென்றிருந்த நடிகை ஶ்ரீதேவி, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குளியலறைத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீதேவி மறைந்து ஓராண்டிற்கும் மேலாகிவிட்ட நிலையில், கேரள DGP ரிஷிராஜ் சிங் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தன்னுடைய நண்பரும் மறைந்த தடயவியல் நிபுணருமான உமாநாதன் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். ஒருவர் எவ்வளவு போதையில் இருந்தாலும் ஒரு அடி தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை. இரு கால்களையும் பிடித்துக்கொண்டு, தலையை அழுத்தி தண்ணீரில் மூழ்கடித்தால் மட்டுமே உயிரிழக்க முடியும் என்று அவர் கூறியதாக ரிஷிராஜ் சிங் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இந்நிலையில், ரிஷிராஜ் சிங்கின் கருத்திற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற முட்டாள்தனமான கதைகளுக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை. இதுபோன்ற கதைகள் தொடர்ந்து வருவதால் பதில் அளிக்கத் தேவையில்லை. அடிப்படையில் ஒருவரின் கற்பனை இது என்று கூறியுள்ளார்.