பிரதமரின் தோஷ நிவர்த்திக்காக யானைக்குட்டியை தாயிடமிருந்து பிரிக்க வேண்டாம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

by Staff Writer 13-07-2019 | 8:55 PM
Colombo (News 1st) சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் இன்று அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர். பிரதமரிடம் கடிதம் ஒன்றைக் கையளிப்பதே இவர்களது நோக்கமாகும். பிரதமரின் தோஷங்கள் நீங்குவதற்காக இசிர எனும் யானைக்குடடி கதிர்காமம் ஆலயத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் யானைக்குட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அலரி மாளிகையில் அதிகாரியொருவரிடம் கடிதத்தைக் கையளித்த பின் பாகியங்கல ஆனந்த சாகர தேரர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
ரிதியகமவில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று உள்ளது. 7 வயதாகும் இசிர எனப்படும் சிறு யானைக்குட்டி ஒன்று அங்கு உள்ளது. தற்போது பிரதமரின் கெட்ட காலத்தை நீக்கிக்கொள்ளவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறவும் கதிர்காமம் ஆலயத்திற்கு அதனை அர்ப்பணித்திட தயாராகி வருகின்றனர். இது பாரிய சாபத்திற்குரிய விடயம். இதற்கு பொறுப்புடைய இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு ஒன்றும் புரிவதில்லை. யானைக் குட்டியை தானமாக வழங்கி அல்லது தாய் தந்தையரை விற்றாவது ஜனாதிபதியாவதற்கு இவர்கள் நினைக்கின்றனர்.