சோமாலிய ஹோட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல்

சோமாலிய ஹோட்டலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல்: 26 பேர் பலி

by Bella Dalima 13-07-2019 | 4:44 PM
சோமாலியாவில் ஹோட்டல் ஒன்றில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நேற்று (12) நுழைந்த வாகனம் ஒன்றில் பயணித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும், ஹோட்டலினுள் நுழைந்ததும் குறித்த வாகனம் வெடித்துச் சிதறியுள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த தற்கொலை பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்துள்ளார். இதனால் ஹோட்டல் வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, பயங்கரவாதிகள் சிலர், துப்பாக்கிகளுடன் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து, ஏராளமான பாதுகாப்பு படையினர் ஹோட்டலை சுற்றிவளைத்து பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பினருக்குமிடையே நீண்டநேரம் நீடித்த இந்த சண்டையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 56 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. சோமாலிய அரசாங்கத்தை கவிழ்க்க அல்-ஷபாப் இயக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.