அமெரிக்க சரக்கு விமானம் நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது

by Staff Writer 13-07-2019 | 8:41 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று (12) அதிகாலை வந்திறங்கிய அமெரிக்காவின் சரக்கு விமானம் இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இன்று காலை ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்பட்டு சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் இங்கு எந்த பொருட்களையும் விட்டுச்செல்லவில்லை என சிவில் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் தயாரிக்கப்படும் உடைகளை கொள்வனவு செய்யும் பொருட்டு இந்த விமானம் இலங்கை வந்துள்ளதாகவும் உடைகளின் ஒரு பகுதியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இறக்கிவிட்டு மீண்டும் அமெரிக்கா நோக்கி அந்த விமானம் பயணிக்கவுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் Western Global Airlines என்ற சரக்கு விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas MD11 விமானம் நேற்று அதிகாலை 3.47 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்தது. அமெரிக்க தயாரிப்பான இந்த விமானம், அதிகளவான பொருட்களுடன் நெடுந்தூரம் பயணிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டது. ஜேர்மனியின் Frankfurt இல் இருந்து பஹ்ரேனுக்கு இந்த விமானம் பயணித்துள்ளது. Western Global Airlines விமான சேவைக்கு சொந்தமான இந்த விமானம் சில நாடுகளிலுள்ள அமெரிக்க முகாம்களுக்கு பயணித்துள்ளமை, இந்த விமானத்தின் பயண மார்க்கத்தை ஆராய்ந்த போது தெரியவந்தது. இந்த விமானம் பஹ்ரேனிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.