இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய்க்கு அபராதம்

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய்க்கு அபராதம்

by Bella Dalima 12-07-2019 | 5:44 PM
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய்க்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 2 ஆவது காலிறுதியாட்டம் பர்மிங்காம் நகரில் நேற்று (11) நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 85 ஓட்டங்களைப் பெற்றார். 224 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 33 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் அதிரடியை வெளிப்படுத்திய ஜேசன் ரோய், அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களைப் பந்தாடினார். 20 ஆவது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை அடிக்க முயற்சிக்கும்போது, பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது. கேரி அவுட் என்று முறையிட்டதும் நடுவர் குமார் தர்மசேன விரலை உயர்த்தி விட்டார். அதிர்ச்சியடைந்த ரோய், பந்து மட்டையில் படவில்லை என்று நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். DRS வாய்ப்பு பயன்படுத்தப்பட்டு விட்டதால் வேறு வழியின்றி அதிருப்தியோடு பெவிலியன் திரும்பினார் ரோய். எனினும் TV ரீப்ளேயில் அது அவுட் இல்லை என்று தெளிவாகத் தெரியவந்தது. ரோய், 65 பந்தில் 5 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரி களுடன் 85 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இந்நிலையில், நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.