ஆடிவேல் சக்திவேல் பவனி ஆரம்பம்: வேல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள்

by Staff Writer 10-07-2019 | 8:52 PM
Colombo (News 1st) முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலைத் தாங்கிய ஆடிவேல் சக்திவேல் பவனி இன்று ஆரம்பமானது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தினால் வேல் பவனி இம்முறை மூன்றாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்தியின் ஆடிவேல் சக்திவேல் பவனியை முன்னிட்டு யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி தேவஸ்தானத்தில் விசேட அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து, அன்னதானக்கந்தனின் மூலஸ்தானத்தில் வேல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பாரம்பரியக் கலையான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம் நிகழ்த்தப்பட, வேல்பெருமான் சந்நிதானத்தை வலம் வந்தார். இதனைடுத்து, ஆடிவேல் சக்திவேல் பவனிக்காகவே சிறப்புற வடிவமைக்கப்பட்ட அலங்காரத் தேரில் வேல்பெருமான் எழுந்தருளச் செய்யப்பட்டார். யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் நீட்ரா வீரசிங்க, MTV/MBC மக்கள் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். செல்வச்சந்திதி முருகன் ஆலயத்தில் ஆரம்பமான வேல்பவனி நெல்லியடி நகரூடாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சென்றடைந்தது. ஆடிவேல் சக்திவேல் வீதி உலாவினை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. நல்லூர் முருகன் ஆலயத்திலிருந்து A9 வீதியூடாக செம்மணி, சாவகச்சேரி, கொடிகாமம், ஆனையிறவு ஊடாக முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தினை ஆடிவேல் சக்திவேல் பவனி சென்றடைந்தது. வேல் பெருமானை தரிசிப்பதற்கான வாய்ப்பு கிளிநொச்சி வாழ் மக்களுக்கும் இன்று கிட்டியது. ஆடிவேல் சக்திவேல் பவனி வவுனியா கந்தசுவாமி கோவிலை சென்றடைந்த வேல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வேல் பவனியின் நாளைய நாள் பயணம் வவுனியா கந்தசுவாமி கோவிலில் ஆரம்பமாகி, மாத்தளையூடாக கொட்டகலையை சென்றடையவுள்ளது. ஆடிவேல் சக்திவேல் பவனி எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை கெப்பிட்டல் மகாராஜா தலைமையக வளாகத்தை வந்தடையவுள்ளது. கெப்பிட்டல் மகாராஜா தலைமையக வளாகத்தில் ஆடிவேல் சக்திவேல் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு 13 ஆம் திகதி வேல் பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெறவுள்ளன. இதன்போது, ஆடிவேல் திருவிழாவினை முன்னிட்டு அறுபடை வீடுகளில் ஆசிர்வதிக்கப்பட்ட வேல் பெருமானை தரிசிப்பதற்கான சந்தர்ப்பம் பக்தர்களுக்கும் கிட்டவுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வேல் பெருமான் கதிர்காமக்கந்தன் ஆலயத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.