சிறுமி துஷ்பிரயோகம்: சிறிய தந்தைக்கு கடூழிய சிறை

4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 7 வருட கடூழிய சிறை 

by Staff Writer 09-07-2019 | 5:24 PM
Colombo (News 1st) திருகோணமலை - சேருநுவர பகுதியில் 4 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிக்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, 3000 ரூபா அபராதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத்தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். சேருநுவர பகுதியில் தனது மனைவியின் முதல் தாரத்தின் மகளான 4 வயது சிறுமியை குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு சட்ட மா அதிபரால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.