பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணை

by Staff Writer 09-07-2019 | 12:04 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் சந்தேகநபர்கள் செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (9ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுப்பது தொடர்பில், கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமையின் ஊடாக, தண்டனைக்குரிய குற்றம் இழைத்துள்ளதாகத் தெரிவித்து அவர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.